ஒரு ஏக்கரில்... ரூ. 1 லட்சம் வருமானம்! - இயற்கையில் இனிக்கும் வாழை!

சு வையான வாழைப்பழ ரகங்களில் ஒன்று ‘ரஸ்தாளி’. இதன் தனிப்பட்ட சுவை காரணமாக இதற்கு எப்போதுமே சந்தையில் வரவேற்பு உண்டு. பலவிதமான வாழை ரகங்கள் ...

சுவையான வாழைப்பழ ரகங்களில் ஒன்று ‘ரஸ்தாளி’. இதன் தனிப்பட்ட சுவை காரணமாக இதற்கு எப்போதுமே சந்தையில் வரவேற்பு உண்டு. பலவிதமான வாழை ரகங்கள் இருந்தாலும், ஆதிகாலத்தில் இருந்து இறைவனுக்குப் படைக்க நம் முன்னோர் உபயோகப்படுத்தியது வாழைப்பழங்களைத்தான். சங்க காலத்தில் ‘கதலி’ என்ற பெயரில்தான் வாழைப்பழம் குறிப்பிடப்பட்டுள்ளது. கதலியில் வெள்ளைக்கதலி, ரச கதலி, செங்கதலி என மூன்று ரகங்கள் உள்ளன. அவற்றில் ரசகதலி என்ற பெயர்தான் மருவி, ரஸ்தாளி என ஆகிவிட்டது. ஆக, முற்காலத்திலிருந்து நம் முன்னோர் உண்டு வந்த வாழைப்பழம், ரஸ்தாளிப் பழம்தான். தற்போது பரவலாக விளைவிக்கப்படும் மட்டி, நேந்திரன், பூவன்... போன்ற ரகங்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டுக்குள் வந்தவை. இத்தகைய சிறப்புகளுடன் விற்பனை வாய்ப்பும் நன்றாக இருப்பதால்தான், பெரும்பாலான வாழை விவசாயிகள் ரஸ்தாளி ரகத்தைத் தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு, இயற்கை முறையில் ரஸ்தாளி ரக வாழையைச் சாகுபடி செய்து நிறைவான வருமானம் ஈட்டி வருகிறார்.

சிவகாசிக்கு அருகே உள்ள மத்திய சேனையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரிசேரி எனும் கிராமத்தில் பாபுவின் வாழைத்தோப்பு இருக்கிறது. சூரியன் மெள்ள உதயமாகிக் கொண்டிருந்த ஒரு காலை வேளையில் பாபுவைச் சந்தித்தோம்.
“தாத்தா, அப்பா எல்லாருமே விவசாயம்தான் செஞ்சிட்டிருந்தாங்க. மானாவாரில கம்பு, சோளம்னும் இறவையில நெல், மிளகாய், பருத்தினும் அப்பா சாகுபடி செய்வார். நான் மூணாவதுக்கு மேல படிக்கப் போகலை.
சின்ன வயசுல இருந்தே தோட்டத்துலதான் இருப்பேன். அப்புறம் விவசாயத்தைப் பார்த்துக்கிட்டே மில் வேலைக்கும் போய்ட்டிருந்தேன். பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி வேலையை விட்டுட்டு முழுசா விவசாயத்துல இறங்கிட்டேன். ஆரம்பத்துல நானும் அப்பா செஞ்சது மாதிரி, ரசாயன உரத்தையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்திதான் வாழை சாகுபடியை ஆரம்பிச்சேன். அதிக உரம் போட்டாதான் மகசூல் கிடைக்கும்னு நினைச்சிட்டிருந்தேன். இதனால, செலவுதான் கூடிக்கிட்டே இருந்துச்சு. வருமானம் உயரலை. இந்தச் சமயத்துலதான் பக்கத்துத் தோட்டத்துல இயற்கை விவசாயம் செய்ற நாராயணன் மூலமா ‘பசுமை விகடன்’ எனக்கு அறிமுகமாச்சு.

அந்தப் புத்தகத்துலதான் இயற்கை விவசாய முறைகளைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து ‘பசுமை ஒலி’ மூலமா வளர்ச்சியூக்கிகள், மூலிகைப் பூச்சிவிரட்டினு எல்லாத்தையும் தயாரிக்கிற முறைகள தெரிஞ்சுகிட்டேன். கடந்த ஆறு வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சிட்டிருக்கேன். ஆரம்பத்துல பல தானியங்களை விதைச்சு, இயற்கை முறையில உளுந்து, பாசிப்பயறு ரெண்டையும் சாகுபடி செஞ்சேன். அதுல மகசூல் சொல்லிக்கிற மாதிரியில்லை. அடுத்து நாடன், ரஸ்தாளினு வாழை ரகங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். இயற்கை முறையில இப்போ வாழை நல்லா விளைஞ்சிட்டிருக்கு” என்று, தான் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன பாபு தொடர்ந்தார்... 
“மொத்தம் 7 ஏக்கர் நிலம் இருக்கு. இது வண்டல் கலந்த களிமண் நிலம். ஒரு ஏக்கர் நிலத்துல ரஸ்தாளியும், இன்னொரு ஏக்கர் நிலத்துல எள்ளும் இருக்கு. ரெண்டுமே அறுவடைப் பருவத்துல இருக்கு. அரை ஏக்கர் நிலத்துல ‘அட்சயா’ங்கிற ஒட்டு ரக நெல் போட்டிருக்கேன். தண்ணிப் பற்றாக்குறையால மீதி நிலம் சும்மாதான் இருக்கு.
மொத்தம் 1,000 வாழைக்கன்னுகளை நடவு செஞ்சேன். அதுல 200 கன்னுகள் சரியா வளரலை. எண்ணூறு கன்னுகதான் தேறி வந்துச்சு. அதுலதான் இப்போ அறுவடை நடந்திட்டிருக்கு. கன்னு நட்ட நாலாவது மாசத்துலயே கடுமையான வறட்சி. ஆனாலும், தொடர்ந்து அமுதக்கரைசலைக் கொடுத்துட்டே இருந்ததால, மரங்கள் காய்ஞ்சு போகாம தாக்குப்பிடிச்சுக்குச்சு. ஆனா, தண்ணி இல்லாததால குலைகள் சரியான அளவுக்குப் பெருக்கல. எண்ணூறு கன்னுகளையும் மறுதாம்பு விட்டதுல, அதுலயும் குலை தள்ள ஆரம்பிச்சிருக்கு. மறுதாம்பு வாழையில குலை நல்லா பெரிசா இருக்கு” என்ற பாபு நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார்.

“தோப்புல இருக்கிற 800 வாழைக் குலைகளையும், ஒரு குலை 150 ரூபாய்னு பேசி குத்தகைக்கு விட்டுட்டேன். இதுவரை 600 குலைகளை அறுவடை பண்ணிட்டாங்க. பொங்கலுக்குள்ள மீதி அறுவடையும் முடிஞ்சுடும். மொத்தம் 800 வாழைகளைக் குத்தகைக்கு விட்டது மூலமா, 1,20,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. உழவுல இருந்து இதுவரை 42,500 ரூபாய் செலவாகியிருக்கு. அதைக் கழிச்சுட்டா 77,500 ரூபாய் லாபம். மறுதாம்புல குலைகள் பெரிசா இருக்கிறதால ஒரு குலை 250 ரூபாய்னு குத்தகைக்கு விடலாம்னு இருக்கேன். ஒரு குலைக்கு 200 ரூபாய்னு விலை கிடைச்சாலும் அது மூலமா 1,60,000 ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
பாபு,
செல்போன்: 98947 72594

இயற்கை வாழை சாகுபடி!

ஒரு ஏக்கர் நிலத்தில் ரஸ்தாளி ரக வாழை சாகுபடி செய்யும் விதம் குறித்து பாபு சொன்ன தகவல்கள் இங்கே...

ரஸ்தாளி வாழை சாகுபடி செய்ய ஐப்பசி, கார்த்திகை, மாசி, வைகாசி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தைக் கொக்கிக் கலப்பையால் உழுது ஒரு வாரம் காயவிட வேண்டும். பிறகு டில்லர் மூலம் ஓர் உழவு செய்து, 10 டன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி, மீண்டும் ஓர் உழவு செய்து 4 நாள்கள் காயவிட வேண்டும். பிறகு, ஆறரை அடி இடைவெளியில் சிறிய குழிகள் எடுத்து விதைக்கன்றை நடவு செய்ய வேண்டும். இந்த இடைவெளியில் 1,000 குழிகளுக்கு மேல் எடுக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் விதைக்கன்றுகள் ஒவ்வொன்றும் ஒன்றரை கிலோவுக்கு மேல் எடை கொண்ட தரமான கிழங்காக இருக்க வேண்டும். விதைக்கன்றுகளை அமுதக்கரைசலில் மூழ்கச் செய்து 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி நடவு செய்ய வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்யும்போது வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது. நடவு செய்த மறுநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு வாரம் கழித்து நடவு செய்த கன்றுகளைச் சுற்றி இறுக்கமாக மண் அணைக்க வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும். சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது சிறந்தது. கன்றுகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கினால், பூஞ்சண நோய்கள் வர வாய்ப்புண்டு. அதனால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நடவுசெய்த 20-ம் நாளிலிருந்து அடுத்த 20 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 20-ம் நாள் களைகளை அகற்றி மண் அணைக்க வேண்டும். 25 முதல் 30 நாள்களுக்குள் குருத்துகள் முளைக்கும்.


30-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை, வாழைக்கன்றுகள் மீது, மீன் அமினோ அமிலத்தையும் பஞ்சகவ்யாவையும் சுழற்சி முறையில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து வர வேண்டும் (10 லிட்டர் தண்ணீருக்கு 250 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்திலும், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்திலும் கலந்து தெளிக்க வேண்டும்). 40-ம் நாளுக்கு மேல் இலைகள் முளைத்து வரும்.

55-ம் நாளில் ஒரு கன்றுக்கு 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு என்ற விகிதத்தில் தூர்ப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும். நடவு செய்த 200-ம் நாள், ஒரு கன்றுக்கு 100 கிராம் கடலைப்பிண்ணாக்கு என்ற விகிதத்தில் தூர்ப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும். 8-ம் மாதத்துக்கு மேல் குலை தள்ள ஆரம்பிக்கும். 10-ம் மாதத்துக்கு மேல், தேவையைப் பொறுத்து மொத்தமாகவோ, பகுதி பகுதியாகவோ அறுவடை செய்யலாம்.

தண்டுத் துளைப்பானுக்கு வேப்பங்கொட்டை!

இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரையில் பூச்சி, நோய்த்தாக்குதல் குறைவுதான் என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூச்சிவிரட்டி தெளிப்பது நல்லது. வாழையில் குலை தள்ளும் நேரத்தில் தண்டுத் துளைப்பான் தாக்குதல் இருக்கும்.

தண்டில் துளை ஏற்பட்டு அதில் பிசின் வடிவது, தண்டுத் துளைப்பான் தாக்குதலின் அறிகுறி. குலை தள்ளும் பருவத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வேப்பங்கொட்டை கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, ஒரு வார இடைவெளியில் மூன்று முறை தெளித்து வந்தால், தண்டுத் துளைப்பான் தாக்குதலைத் தவிர்க்கலாம். 3 கிலோ வேப்பங்கொட்டையை உரலில் இடித்துத் துணியில் கட்டி, அதை 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இரண்டு நாள்கள் வரை ஊறவைத்து வடிகட்டினால், வேப்பங்கொட்டைக் கரைசல் தயாராகிவிடும்.


Related

விவசாயக்குறிப்புக்கள் 4360912104548172353

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item